தமிழக பிரச்சினைகள் பற்றி தெரியாதது போல் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி


தமிழக பிரச்சினைகள் பற்றி தெரியாதது போல் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 10:25 PM GMT)

தமிழக பிரச்சினைகள் பற்றி தெரியாதது போல் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடலூர்,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் யார்? என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்புகிறார். தமிழ்நாட்டில் நடக்கிற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து தெரியாதவராக இருக்கிறாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா? திரையில் சினிமா இயக்குனர்கள் கொடுக்கிற வசனங்களை பேசி நடிக்கின்ற வெறும் நடிகனாக மட்டும் தான் ரஜினிகாந்த் வாழ்ந்து வருகிறாரா? என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இதுபோன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி தெரியாமல், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்?.

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை, மீத்தேன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை. 7 பேர் விடுதலை குறித்து கேட்டால் பதில் இல்லை, நியூட்ரினோ திட்டம் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை பாலைவனமாக மாற்றும் பெட்ரோலிய மண்டல திட்டம் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் இல்லை. நான் இப்போதுதான் இமய மலையில் இருந்து வருகிறேன். இப்போது தான் விமான நிலையத்தில் நான் இறங்கி வருகிறேன் என்று சொல்கிற ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் அரசியல் தலைமையாக அல்லது இந்த நாட்டை ஆளப்போகிறோம் என்று அறிவிப்பதற்கான தார்மிக உரிமை அவரிடத்தில் இருக்கிறதா? என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.

7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ரஜினிகாந்த் தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும்.

ரஜினிகாந்தின் பேட்டிக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதன் விளைவாக இன்றைக்கு தானாக பத்திரிகையாளர்களை அழைத்து பேசியுள்ளார். அன்றைக்கு தூத்துக்குடி கலவரத்துக்கு பின்னால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், சமூக விரோதிகள் இருக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் திருவாய் மலர்ந்ததன் விளைவாக காலா படம் காலாவதியானது போல் 500 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டு இருக்கிற 2.0 படமும் தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, பட தயாரிப்பாளர்கள், படத்துக்கு முதலீடு செய்தவர்கள் வேண்டுகோளின் பேரில் பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசு பதவிகளில் 100-க்கு 90 சதவீத வேலைகளை வடஇந்தியர்கள் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்.கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதாது என்று அவர் கூறினார்.

அப்போது கடலூர் மாவட்ட செயலாளர் ஆனந்த், மாநில மகளிர் அணி செயலாளர் அமராவதி, மாநில மாணவர் அணி செயலாளர் அருள்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story