குடியாத்தம் அருகே மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி


குடியாத்தம் அருகே மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 Nov 2018 10:15 PM GMT (Updated: 14 Nov 2018 1:58 PM GMT)

குடியாத்தம் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

குடியாத்தம், 

குடியாத்தம் அருகே முக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி, ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை அலுவலர். இவரது மகன் தர்மராஜ் (வயது 25). கூலி தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.

தர்மராஜிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக தனியார் டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் அதிகமாகவே கடந்த 12–ந் தேதி மாலை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் காய்ச்சல் அதிகமாகி உடல்நிலை மோசமாகியது.

இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சுமார் 5 மணி நேரத்திற்கு பின்னர் இரவு 10 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு தர்மராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மர்ம காய்ச்சலால் தர்மராஜ் இறந்ததை தொடர்ந்து மருத்துவ குழுவினர் முக்குன்றம் பகுதியில் முகாமிட்டு அப்பகுதியில் முழு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 மணி நேரம் தாமதமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததால் தான் தர்மராஜ் உயிரிழந்தார் என்றும், உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவர் காப்பாற்றப்பட்டு இருக்கலாம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.


Related Tags :
Next Story