விவாகரத்து கேட்டு நோட்டீஸ்; மனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை


விவாகரத்து கேட்டு நோட்டீஸ்; மனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2018 11:45 PM GMT (Updated: 14 Nov 2018 8:07 PM GMT)

விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி தனது மனைவி, மாமியாரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

பொள்ளாச்சி,

கோவை அருகே உள்ள போத்தனூரை சேர்ந்தவர் பாபு (வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த சுமதிக்கும் (42) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சியில் பாபுவும், சுமதியும் குடும்பம் நடத்தி வந்தனர். குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் விரக்தி அடைந்த சுமதி, பாபுவை பிரிந்து, அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது தாய் விசாலாட்சியுடன் (68) வசித்து வந்தார். இதனால் சுமதியிடம் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு பாபு அழைத்தார். அதற்கு சுமதி மறுத்ததுடன் விவாகரத்து கேட்டு வக்கீல் மூலம் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாபு, மாமியார் வீட்டுக்கு சென்று சுமதியையும், விசாலாட்சியையும் மிரட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமியார் வீட்டுக்கு பாபு வந்து கதவை தட்டினார்.

அப்போது கதவை திறந்த விசாலாட்சி, எதற்காக இங்கு வந்தாய் என்று கேட்டார். அதற்குள் பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரது கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் விசாலாட்சி சரிந்து கீழே விழுந்தார். இதை பார்த்த சுமதி, அலறி கொண்டு வெளியே ஓட முயற்சி செய்தார். அவரை கீழே தள்ளிய பாபு அவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். சுமதியும், விசாலாட்சியும் இறந்து விட்டதை உறுதி செய்த பின், வீட்டின் உள்ளே பாபு சென்றார்.

பின்னர் அவர், வீட்டில் உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமதியின் அண்ணன் பிரகாஷ் வெளியே வந்தார். அப்போது வீட்டின் வெளியே ரத்தம் சிதறி கிடந்தது. இதனால் பதறி போன அவர் வீட்டின் உள்ளே சென்றார். அப்போது, தாய் விசாலாட்சி, தங்கை சுமதி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், பாபு தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story