திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2018 9:45 PM GMT (Updated: 14 Nov 2018 8:51 PM GMT)

திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாம்பரம்,

 தாம்பரம், ரமணி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மகள் பூர்ணிமா (வயது 23). இவர் மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் பூர்ணிமாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக பூர்ணிமாவுக்கு வேலூரில் மாப்பிள்ளை பார்த்தனர்.

ஆனால் பூர்ணிமாவுக்கு திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லை என தெரிகிறது. இதனால் அவர் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த அவருடைய பெற்றோர் திருமணம் செய்துகொள்ளும் படி பூர்ணிமாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பூர்ணிமா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பூர்ணிமா தனது அறையில் தூங்க சென்றார்.

பின்னர் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் பூர்ணிமா அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அறையின் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு பூர்ணிமா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பூர்ணிமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story