பட்டாசு ஆலையை நிரந்தரமாக மூட அனுமதி கேட்கும் உரிமையாளர்கள் - அரசுக்கு மனு அனுப்ப முடிவு


பட்டாசு ஆலையை நிரந்தரமாக மூட அனுமதி கேட்கும் உரிமையாளர்கள் - அரசுக்கு மனு அனுப்ப முடிவு
x
தினத்தந்தி 14 Nov 2018 10:53 PM GMT (Updated: 14 Nov 2018 10:53 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பட்டாசு தயாரிக்க முடியாத நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் தங்களது ஆலைகளை நிரந்தரமாக மூட அனுமதி கேட்டு அரசுக்கு மனு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

சிவகாசி,

சுப்ரீம் கோர்ட்டு விதித்த கட்டுப்பாட்டால் சிவகாசியில் இருந்து தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட 50 சதவீதம் பட்டாசுகள் வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் விற்பனையாகாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) அலுவலகத்தில் ஆலோசனை செய்தனர். இதில் சுப்ரீம் கோர்ட்டு தற்போது விதித்துள்ள விதியின் கீழ் பட்டாசுகளை தயாரிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் பட்டாசு ஆலைகளை மூடிவிடுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் நாளுக்கு நாள் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருவதால் பட்டாசு ஆலைகளை நிரந்தரமாக மூடிவிட முடிவு செய்து அரசுக்கு மனு செய்ய இருப்பதாக தெரிவித்தனர். இந்த கருத்துக்கு அங்கு கூடி இருந்த மற்ற பட்டாசு ஆலை அதிபர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த விதிமுறையின் கீழ் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தாமல் 60 சதவீத பட்டாசுகள் தயாரிக்க முடியாது. அதே போல் சர வெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடையால் 20 சதவீத பட்டாசுகள் தயாரிக்க முடியாது. மேலும் பசுமை பட்டாசுகள் தான் தயாரிக்க வேண்டும் என்று கூறி இருப்பதால் பசுமை பட்டாசுகள் குறித்து பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை. இது குறித்து யாரிடம் கேட்பது என்றும் தெரியாமல் தவிக்கிறார்கள்.

இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த தொழிலை தொடர முடியாத நிலையில் உள்ள பல பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தங்கள் ஆலையை நிரந்தரமாக மூடிவிட முடிவு செய்துள்ளனர். அதற்காக உரிய அரசு அதிகாரியிடம் விண்ணப்பிக்கவும் முடிவு செய்துள்ளனர். ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு உரிய பணிக்கொடையை வழங்கவும் தயாராகி வருகிறார்கள். இதனால் சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி மத்திய, மாநில அரசை வலியுறுத்தியும், பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டத்தை கைவிட வலியுறுத்தியும், நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் சிவகாசி பஸ் நிலையம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமுத்திரம், கூடலிங்கம், சுரேஷ்குமார், இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Next Story