குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவி கையை வெட்டிய டிரைவர் ஆரணி அருகே பரபரப்பு


குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவி கையை வெட்டிய டிரைவர் ஆரணி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 15 Nov 2018 1:29 PM GMT (Updated: 15 Nov 2018 1:32 PM GMT)

ஆரணி அருகே குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவி கையை டிரைவர் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி, 

ஆரணி அருகே பையூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 39), இவர் செய்யாறு நகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்மு (32). இவர்களுக்கு அஸ்வின்குமார் (9), அஸ்வத்குமார் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

நவீன்குமாருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்– மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த அம்மு இரும்பேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு 2 மகன்களுடன் சென்று விட்டார்.

நவீன்குமார் நேற்று முன்தினம் இரும்பேடுக்கு சென்று அம்முவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அம்மு மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அம்முவின் தலையில் வெட்டினார். பின்னர் அம்முவின் வலது கையை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் அம்மு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அம்மு அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story