ராஜபாளையத்தில் பனைமரத்தில் லாரி மோதி டிரைவர் நசுங்கி சாவு


ராஜபாளையத்தில் பனைமரத்தில் லாரி மோதி டிரைவர் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 15 Nov 2018 11:00 PM GMT (Updated: 15 Nov 2018 6:28 PM GMT)

பனை மரத்தில் லாரி மோதி டிரைவர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். அந்த லாரியில் எண்ணெய் டின்களில் இருந்த பாமாயில் தரையில் கொட்டி நாசமானது.

ராஜபாளையம், 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூரைப்பிள்ளையார் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான பாமாயில் தயாரிக்கும் ஆலை உள்ளது. அங்கிருந்து பாமாயில் டின்களை ஒரு லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். அந்த லாரியை சரவணகுமார் என்பவர் ஓட்டிச்சென்றார்.

அந்த லாரி ராஜபாளையம் அரசு மருத்துவமனையை தாண்டி சென்று கொண்டிருந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது இடித்தது. இதை கவனித்த டிரைவர் சரவணகுமார் லாரியை வேகமாக திருப்பிய போது, நிலை தடுமாறி ஓடி சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. பனை மரமானது டிரைவரை நசுக்கியது.

இதில் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் வெளியே எடுக்க முடியாதபடி சிக்கிக்கொண்டது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரவணகுமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் லேசான காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இந்த விபத்தால் லாரியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பாமாயில் சாலையில் கொட்டி நாச மானது.

Next Story