தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ‘கஜா’ புயலால் பொதுமக்கள் அச்சம்; பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ‘கஜா’ புயலால் பொதுமக்கள் அச்சம்; பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
x
தினத்தந்தி 15 Nov 2018 11:15 PM GMT (Updated: 15 Nov 2018 6:30 PM GMT)

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங் களில் கஜா புயலால் மக்கள் கடும் அச்சத்துடன் காணப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (வெள்ளிக் கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களிலும் நேற்று மாலை கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்-ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன.

தஞ்சாவூர்,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாகை அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டதால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த புயல் எச்சரிக்கையையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனையொட்டி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் அனைவரும் தொழிலுக்கு செல்லாததுடன் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர். ஒரு சில மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

இந்த புயலின்போது பலத்த காற்று, மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டதாலும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்ட தாலும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே காணப்பட்டனர்.

தஞ்சை உள்பட மூன்று மாவட்டங்களிலும் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் அடித்தது. புயலுக்கான அறிகுறியே தெரியவில்லை. இந்த நிலையில் மதியத்துக்குப்பின்னர் நிலைமை கொஞ்சம் மாறியது. வெயில் மறைந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மதியத்திற்கு பின்னர் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கத்தை விட 1 அடி உயரத்துக்கு அலைகள் காணப்பட்டன. மாலையில் நாகை உள்பட ஒரு சில இடங்களில் மழை பெய்யத்தொடங்கியது.

காலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்ட பகுதிகளில் கூட மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. புயல் காரணமாக பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நாகை கடற்கரை மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கடற்கரை பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரைக்கு வந்த ஒரு சிலரை போலீசார் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியபடி இருந்தனர். கடற்கரையில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் நாகையில் நேற்று மாலை 4.50 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் மழை பெய்தது. அதன்பிறகு மழை நின்று விட்டது. மீண்டும் மாலை 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. கால் மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையினால் நாகையில் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சையில் இருந்து சென்னைக்கு செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னார்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இது தவிர தஞ்சை வழியாக செல்லும் திருச் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் அதாவது திருச்சி, அரியலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்கப் பட்டன. திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு சென்ற ரெயில் திருவாரூரில் நிறுத்தப்பட்டது.

மாலை முதல் புயல் கரையை கடக்கும் வரையில் வாகனங்களில் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புயல் பாதிப்புகளை சமாளிக்க பல்வேறு குழுக்களும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் பாதுகாப்பு நிவாரண முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மாலை 3 மணி முதல் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கடலோர பகுதிகளில் பொதுமக்கள் நடமாட அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு பொதுமக்கள் வந்தால் அவர்கள் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கடலோர மாவட்டங்களில் ஆம்புலன்சுகள், அவசர கால ஊர்திகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

புயல் காரணமாக பல்வேறு இடங்களில் உயர்ந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன. நிவாரண முகாம்களில் மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

தஞ்சையில் இருந்து நாகை, திருவாரூர், வேதாரண்யம், கடலூர், புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்குவது மாலை முதல் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டன. தஞ்சையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் கும்ப கோணம், கடலூர் வழியாக இயக்காமல் திருச்சி வழியாக இயக்கப்பட்டன. புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களுக்கு குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சை மாநகரில் இரவு 8 மணிக்கு பிறகு டவுன் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டன.

கஜா புயல் காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் இன்று ஏற்கனவே உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story