சதாப்தி ரெயிலில் கூட்டம் அதிகரிக்க கோவை எக்ஸ்பிரசை தாமதமாக இயக்குவதாக பயணிகள் புகார்


சதாப்தி ரெயிலில் கூட்டம் அதிகரிக்க கோவை எக்ஸ்பிரசை தாமதமாக இயக்குவதாக பயணிகள் புகார்
x
தினத்தந்தி 15 Nov 2018 10:15 PM GMT (Updated: 15 Nov 2018 6:46 PM GMT)

சதாப்தி ரெயிலில் கூட்டம் அதிகரிக்க கோவை எக்ஸ்பிரசை தாமதமாக இயக்குவதாக பயணிகள் புகார் கூறுகிறார்கள்.

கோவை,

கோவையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் இரவு 11 மணிக்கு சென்னை சென்றடைவதற்கு பதிலாக 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்று சேருகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இரவு 11.30 மணிக்கு மேல் சென்னை யில் இறங்கும் பயணிகள் தங்களின் இருப்பிடத்துக்கு செல்ல ஆட்டோ, டாக்சி கட்டணம் இரு மடங்கு கொடுக்க வேண்டி உள்ளது. மேலும் தனியாக செல்லும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதற்கு கோவை எக்ஸ்பிரசை ரெயில்வே நிர்வாகம் தாமதமாக இயக்குவதே காரணம் என்று ரெயில் பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது குறித்து கோவை சமூக ஆர்வலர் கோகிலன் கூறிய தாவது:-

கோவை எக்ஸ்பிரஸ் 2014-ம் ஆண்டு வரை கோவையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை சென்றடைந்தது. இது கோவை மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு கோவை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் படிப்படியாக மாற்றப்பட் டது. இதனால் தற்போது அந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு மேல் சென்னை சென்றடைகிறது.

கோவையில் இருந்து சென்னைக்கு புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை ஊக்குவிப்பதற்காக, சாதாரண மக்கள் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் தாமதமாக இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து 25 நிமிடம் இடைவெளியில் 2 ரெயில்கள் சென்னைக்கு புறப்படும் போது அதிக கட்டணம் உள்ள ரெயி லில் பயணிகள் செல்ல மாட்டார்கள். எனவே கோவை எக்ஸ்பிரசின் நேரம் மதியம் 2.20 மணியில் இருந்து 3.20 -க்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து கடந்த 2 மாதமாக மதியம் 2.55 மணிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கோவையில் இருந்து புறப்படும் அந்த ரெயில் இரவு 10.15 மணிக்கு சென்னை சென்றடைகிறது. குளுகுளு வசதி கொண்ட அந்த ரெயிலில் மாலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

அதில் டிக்கெட் பன்மடங்கு அடிப்படையில் (டைனமிக் ரேட்) அதாவது விமானங்கள் போன்று கட்டணம் வசூலிக் கப்பட்டது. அதாவது 3 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் ஒரு கட்டணமும். பயணம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் அதை விட அதிக கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஆனால் அந்த கட்டண முறை தற்போது திரும்ப பெறப்பட்டு விட்டது. தற்போது அந்த ரெயிலில் கட்டணமாக ரூ.1,285, எக்சிகியூட்டிவ் வகுப்பு கட்டணமாக ரூ.1,870 வசூலிக்கப்படுகிறது.

கோவை- சென்னை சதாப்தி எக்ஸ்பிரசுக்கு முன்னதாக கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டால் சதாப்தி ரெயிலில் பயணிகள் செல்ல மாட்டார்கள் என்று கருதி கோவை எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றியுள்ளனர். கோவை எக்ஸ்பிரசில் சென்னைக்கு இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.170 தான். எனவே கட்டணம் குறைந்த அந்த ரெயிலில் தான் பயணிகள் செல்வார்கள் என்பதால் கோவை எக்ஸ்பிரசின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது தவறான அணுகுமுறை.

கோவையில் இருந்து சென்னைக்கு மதியம் 2.55 மணிக்கு புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரசில் செவ்வாய் தவிர திங்கள் முதல் வியாழன் வரையுள்ள நாட்களில் 60 முதல் 80 சதவீத பயணிகள் செல்கிறார்கள். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ரெயில் 100 சதவீத பயணிகளுடன் செல்கிறது. இதனால் சதாப்தி எக்ஸ்பிரசில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனாலும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கோவை எக்ஸ்பிரசின் நேரத்தை மாற்றியதால் பயணிகள் அவதிப்படுகிறார்கள். இதை உணர்ந்து கோவையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் புறப்பட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story