வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு
ராஜபாளையத்தில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார்சைக்கிள்களை மர்ம நபர்கள் இரவில் தீ வைத்து எரித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெரு பகுதியில் வீடுகளின் முன்பு பலர் தங்களது மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி வைப்பது வழக்கமாகும். இந்த நிலையில் நள்ளிரவில் சத்தம் கேட்டதை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அப்போது, கூலி தொழிலாளி முருகன், அரசு பஸ் கண்டக்டர் காளிமுத்து, டாஸ்மாக் ஊழியர் பெரியசாமி ஆகியோருடைய வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பொது மக்களே தீயை அணைத்தனர். எனினும் 3 வாகனங்களும் எரிந்து நாசமானது.
மோட்டார்சைக்கிள்களுக்கு தீவைக்கப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தீ வைத்த மர்ம நபர்கள் குறித்தும், தீ வைத்தது, முன்பகை காரணமாகவா அல்லது குடி போதையில் நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம், அப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story