பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சாவு: பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சாவு: பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்
x
தினத்தந்தி 15 Nov 2018 10:30 PM GMT (Updated: 15 Nov 2018 8:09 PM GMT)

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உயிரிழந்த மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவி பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி அரசு பள்ளியில் படித்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த மாணவியை அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 22), சதீஷ் (22) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதையடுத்து தர்மபுரி காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அந்த மாணவி கடந்த 10-ந்தேதி உயிரிழந்தார். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சதீசை கைது செய்தனர். மற்றொரு வாலிபர் ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த முத்துகிருஷ்ணன் தர்மபுரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக அரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், நேற்று, காலை இந்த வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர், அதே பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி மற்றும் தர்மபுரி காப்பக கண்காணிப்பாளர், காப்பாளர் ஆகிய 5 பேரும், அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சக்திவேல் முன், ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்கள் 5 பேரும் தனித்தனியாக பூட்டிய அறையில் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். 

Next Story