திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் கால்வாயால் நோய் பரவும் அபாயம்


திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் கால்வாயால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 15 Nov 2018 9:48 PM GMT (Updated: 15 Nov 2018 9:48 PM GMT)

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் கால்வாயால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வீடுகளின் முன்பு மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவி வருகிறது. திருவொற்றியூர் மேற்கு பகுதி 6-வது வார்டுக்கு உட்பட்ட சரஸ்வதி நகர், ராஜாசண்முகம் நகர், அம்பேத்கர் நகர், ஜே.ஜே.நகர், டி.கே.பி. நகர், கலைஞர் நகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தெருக்களில் செல்லும் மழைநீர் கால்வாயில் விடுகின்றனர். இந்த கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து கால்வாயில் நிரம்பி செல்ல வழி இல்லாமல் சாலையில் வழிந்தோடி வருகிறது.

மேலும் கால்வாயில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்படுவதில்லை. மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இந்தப்பணிகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கால்வாயில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வீடுகளுக்கு இடையே உள்ள காலிமனைகளில் புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இவற்றில் ஆகாயத்தாமரை செடிகள், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அங்கிருந்து பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.

எனவே டெங்கு காய்ச்சலில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் குறிப்பாக 6-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாயை தூர்வாருவதோடு, காலிமனைகளில் உள்ள புதர்களை அகற்றி பொதுமக்களை நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story