கிராம மக்களுடன் அ.ம.மு.க.வினர் சந்திப்பு


கிராம மக்களுடன் அ.ம.மு.க.வினர் சந்திப்பு
x
தினத்தந்தி 16 Nov 2018 10:42 PM GMT (Updated: 16 Nov 2018 10:42 PM GMT)

அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கிராம மக்களை நேரில் சென்று சந்தித்து சாதனைகளை விளக்கி கூறினர்.

மானாமதுரை,

மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே அ.ம.மு.க.வினர் களப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தமிழகத்தில் மானாமதுரை சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட 20 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மானாமதுரை தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாரியப்பன் கென்னடி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடுவார் என தினகரன் அறிவித்துள்ளதாக அந்த கட்சியினர் கூறினர். இதையடுத்து தொகுதி முழுவதும் உள்ள அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கிராம மக்களை நேரில் சந்திக்கும் களப்பணியில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து அந்த கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:- தற்போது தொகுதி முழுவதும் குக்கர் சின்னம் வரையும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட 3 பேரூராட்சி பகுதிகளிலும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 300-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் சின்னங்களை வரையபட்டு வருகிறது. மேலும் வீடு வீடாக சென்று அ.ம.மு.க. வேட்பாளரை நினைவு படுத்தி வருகிறோம். பெரும்பாலான கிராமங்களில் அ.ம.மு.க.வினருக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

மானாமதுரை தொகுதி முழுவதும் எம்.எல்.ஏ.வாக பதவியில் இருந்த 1½ வருடத்தில் செய்த சாதனைகளை விளக்கி கூறி வருகிறோம். மானாமதுரை அரசு பெண்கள் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி வருவது. குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கு தீர்வு கண்டது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் பற்றி கிராம மக்களிடம் எடுத்து கூறி வருகிறோம்.

இளையான்குடி, சாலை கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சொந்த செலவில் இன்று வரை குடிநீர் வினியோகத்திற்கு ஏற்பாடுகள் செய்து வருவதும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இளையான்குடி வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் குக்கர் சின்னம் வரையப்பட்டு வருகிறது. மாரியப்பன்கென்னடிக்கு ஆதரவாக இப்போதே நாங்கள் களப்பணியில் இறங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், வேலுச்சாமி, நகர செயலாளர் கோபால், வழக்கறிஞர்கள் குருமுருகானந்தம், சுரேஷ்பாபு, பூவந்தி ஆறுமுகம், திருப்புவனம் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story