திருவாரூரை புரட்டி போட்ட ‘கஜா’ புயல் நிவாரண பணிக்கு திருச்சியில் இருந்து 300 பேர் பயணம் கலெக்டர் ராஜாமணி வழியனுப்பினார்


திருவாரூரை புரட்டி போட்ட ‘கஜா’ புயல் நிவாரண பணிக்கு திருச்சியில் இருந்து 300 பேர் பயணம் கலெக்டர் ராஜாமணி வழியனுப்பினார்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:36 PM GMT (Updated: 16 Nov 2018 11:36 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் ‘கஜா’ புயல் காரணமாக, அங்கு புயல் நிவாரண மறுசீரமைப்பு பணிக்கு திருச்சியில் இருந்து 300 பேர் புறப்பட்டு சென்றனர். அவர்களை கலெக்டர் ராஜாமணி வழியனுப்பி வைத்தார்.

திருச்சி,

வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா புயல் நள்ளிரவில் வேதாரண்யம், நாகை மாவட்டம் இடையே கரையை கடந்து திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி வழியாக திண்டுக்கல்லை மையம் கொண்டது. பின்னர் அங்கிருந்து வலுவிழந்து கேரள மாநிலம் நோக்கி சென்று அரபிக்கடலில் மையம் கொண்டது.

கஜா புயல் தீவிரம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. மேலும் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஏராளமான மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன. திருவாரூர் மாவட்டத்தையே கஜா புயல் புரட்டி போட்டதுபோல காணப்பட்டது. அங்கு அரசு சார்பில் உடனடியாக நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மறு சீரமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களில் இருந்தும் தலா 50 துப்புரவு பணியாளர்கள் வீதம் மொத்தம் 200 பேர் நேற்று திருவாரூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பரசுராமன், கணேசன் ஆகியோர் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் 8 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 200 பேர், தங்களது உடமைகளுடன் 3 பஸ்களில் திருவாரூர் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு சென்று புயல் நிவாரண மறுசீரமைப்பு பணிகளை செய்வார்கள்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பஸ்களை, மாவட்ட கலெக்டர் ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அங்கு சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார். திருவாரூரில் மறுசீரமைப்பு பணிக்கு உதவியாக 15 டிப்பர் லாரிகளும், மரம் அறுக்க பயன்படும் அறுவை எந்திரம் உள்ளிட்ட நவீன கருவிகளும் எடுத்து செல்லப்பட்டன. இதுபோல திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 100 பேர் புயல் நிவாரண பணிக்காக திருவாரூர் புறப்பட்டு சென்றனர்.

Next Story