கஜா புயலால் வாழைகள் சேதம்: இழப்பீடு கேட்டு அதிகாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


கஜா புயலால் வாழைகள் சேதம்: இழப்பீடு கேட்டு அதிகாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:46 PM GMT (Updated: 16 Nov 2018 11:46 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு அதி காரியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

‘கஜா’ புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே திருச்சி மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக திருச்சியில் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. பனையபுரம் வடக்குதெருவை சேர்ந்த சரவணக்குமார், பாலகிருஷ்ணன், செந்தில்குமார், பாலன், தெற்கு தெருவை சேர்ந்த ராஜகோபால், செல்லத்தம்பி, ஆறுமுகம், ஸ்ரீராமமூர்த்தி, விஜயேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 8 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் கனக மாணிக்கம், மண்டல துணை தாசில்தார் செல்வக்குமார், வருவாய் அதிகாரி கோமதி, கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் நேந்திரம் வாழை சாகுபடி செய்து கடந்த 8 மாதத்தில் இருந்து இதுவரை ஒவ்வொரு விவசாயியும் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்திருக்கிறோம்.

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள் அனைத்தும் தார் ஈன்றிருந்ததாகும். இன்னும் 2 மாதத்தில் வாழைத்தார்கள் அனைத்தும் முழுமையான விளைச்சலை அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் வந்திருக்கும். அவ்வாறு அறுவடை செய்யப்படும் வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கு விற்பனையாகும். தற்போது காற்றில் சாய்ந்த வாழைமரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதேபோன்று மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி, சிலையாத்தி, கிளியநல்லூர், சிறுகாம்பூர், வயல்நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்திருந்த 10 ஏக்கர் விளை நிலத்தில் வாழை மரங்கள் காற்றில் முற்றிலும் சாய்ந்தன. இதில் கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன், பிரபு மற்றும் திருவாசி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன் ஆகிய விவசாயிகளின் விளை நிலத்தில் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன.

ஜீயபுரத்தை அடுத்த திருச்செந்துறை பகுதியில் நேற்று காலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் சிவன் கோவில் அருகில் உள்ள பழமையான அரசமரத்தின் கிளைகள் முறிந்து அருகில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடத்தின் மேல் விழுந்தது. காற்றின் வேகம் காரணமாக கடியாக் குறிச்சியில் காவிரி ஆற்றின் கரையில் இருந்த புளிய மரம் திருச்சி-கரூர் சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணிகண்டம் பகுதியில் உள்ள நாகமங்கலம், அளுந்தூர், பாத்திமா நகர், மேக்குடி, ஓலையூர், இனாம்குளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பொன்மலை, பொன்மலைப்பட்டி, அரியமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பொன்மலைப்பட்டி பஸ் நிலையத்தில் 2 பெரிய மரங்கள் விழுந்தன. அவற்றை அப்பகுதி பொதுமக்களே அப்புறப்படுத்தினர்.

ஜா புயல் காரணமாக துறையூர் அடுத்துள்ள சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பொம்மன் வளர்த்து வந்த 2 மாடுகள் மின்னல் தாக்கியதில் செத்தன. தகவல் அறிந்த தாசில்தார் ரவிசங்கர் இறந்த மாடுகளை பார்வையிட்டு பசுமாட்டிற்கு ரூ.30 ஆயிரமும், காளை மாட்டிற்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தார்.
முசிறி அருகே திருச்சி- நாமக்கல் சாலையில் செவந்தலிங்கபுரம் கிராமத்தில் சூறாவளி காற்றினால் சாலை ஓரத்தில் இருந்த புளியமர கிளை முறிந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி வாத்தலை அருகே உள்ள ஆமூர், மஞ்சகோரை, கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைமரங்கள் சாய்ந்தன. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆமூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று அதிகாரி கண்ணனிடம் சேதமடைந்த வாழை மரங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர், கோரிக்கை மனு ஒன்றை எழுதி கொடுங்கள் அதன்பின் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனைதொடர்ந்து விவசாயிகள் உடனடியாக மனுவை எழுதி கொடுத்தனர். அதை வாங்க மறுத்த கிராம நிர்வாக அதிகாரி முசிறி தாலுகா அலுவலகத்திற்கு செல்லவிருப்பதால் நாளை (இன்று) வரும்படி அவர்களிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரி கண்ணனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மனு கொடுப்பதற்காக அதிகாரி வரும்வரை விவசாயிகள் அலுவலகத்தில் காத்திருந்தனர். அவர் நீண்ட நேரம் வரை வராததால் விவசாயிகள் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் செய் தனர்.

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே லால்குடியில் செல்லும் சாலையின் ஓரத்தில் இருந்த ஆலமரம் நேற்று திடீரென சாலையின் குறுக்கே சாய்ந்தது.

மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி மினிக்கியூரில் மூக்கையா என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் மற்றும் 3 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Next Story