கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்


கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:15 PM GMT (Updated: 17 Nov 2018 6:37 PM GMT)

மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திறக்கக்கோரி ஆண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கெட்ணமல்லி கிராமத்தில் கடந்த 12-ந்தேதி புதிதாக அரசு மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையொட்டி அன்றைய தினம் மேற்கண்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், மதுக்கடை திறக்கப்படாது என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மேற்கண்ட மதுக்கடை திறக்கப்பட்டது. தகவலறிந்து நேற்று மாலை, அருகே உள்ள கிராமங்களில் இருந்து வந்த பெண்கள் சிலர் கடையை திறக்க கூடாது என்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மதுக்கடை மூடப்பட்டது.

அதே சமயத்தில் குடியிருப்புகள் எதுவும் இல்லாத மேற்கண்ட அதே இ்டத்தில் மதுக்கடையை திறக்க வேண்டும் என ஆண்கள் அங்கு திரண்டு வந்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கவரைப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயபிரகாஷ், கிராம நிர்வாக அதிகாரி பாபு ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது தாசில்தார் உத்தரவின்படி இது தொடர்பாக இரு தரப்பினரையும் அடுத்த வாரம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்றும், அதுவரை கடை திறக்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story