பெரம்பலூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


பெரம்பலூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 7:13 PM GMT)

பெரம்பலூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் தெப்பக்குளம் கிழக்குகரையில் உள்ள அய்யப்பசாமி கோவிலில் இருந்து ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். அதேபோல இந்தாண்டு அய்யப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே அய்யப்பசாமி கோவிலுக்கு வருகை தந்தனர்.

முதன்முதலில் கார்த்திகை மாலை அணிந்து ஒருமண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் கன்னிசாமி பக்தர்களுக்கும், ஆண்டுதோறும் சபரி மலைக்கு செல்லும் யாத்ரிகர்களுக்கும், அய்யப்பசேவா சங்க ஒருங்கிணைப்பாளர் நாராயணசாமி முன்னிலையில் மருந்தாளுனர் கோவிந்தராஜன், சேகர் நாயுடு, வள்ளிராஜேந்திரன், முத்தையா ஆகிய குருசாமிகள் சந்தனமாலை மற்றும் துளசி மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்து, விரதம் முடியும் வரை அய்யப்ப பக்தியை சிரத்தையுடன் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கோபூஜையும், அய்யப்ப சாமிக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில் அய்யப்ப குருசாமிகள் கவிதா மணி, பவானிசிங், பார்த்தசாரதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

52-வது ஆண்டு மண்டலபூஜை மகாஉற்சவ விழா டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் (கார்த்திகை மாத இறுதியில்) நடைபெற உள்ளது. மண்டலபூஜை மகாஉற்சவ நிகழ்ச்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதிசெய்யப்படும் என்று சங்க நிர்வாகிகள்தெரி வித்தனர்.

Next Story