பூதப்பாண்டி அருகே மாடியில் இருந்து விழுந்த பெண் சாவு


பூதப்பாண்டி அருகே மாடியில் இருந்து விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 17 Nov 2018 10:45 PM GMT (Updated: 17 Nov 2018 10:15 PM GMT)

பூதப்பாண்டி அருகே மாடியில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர், சாஸ்தாகோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி. இவரது மனைவி கோகிலா (வயது 43). செல்வகணபதி இறந்துவிட்டார். இதனால் கோகிலா தனது தங்கை பகவதி வீட்டில் வசித்து வந்தார். மேலும், கோகிலாவுக்கு வலிப்பு நோய் உள்ளதாக தெரிகிறது.

சம்பவத்தன்று துணிகளை துவைத்து காயப்போடுவதற்காக மாடிக்கு சென்றார். படியேறி மேலே சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் நிலைகுலைந்து படிக்கட்டு வழியாக உருண்டு கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story