மான்கள், காட்டுப்பன்றிகள், குதிரைகள் மடிந்தன: காரைக்காலில் கரை ஒதுங்கிய விலங்குகளின் உடல்கள்


மான்கள், காட்டுப்பன்றிகள், குதிரைகள் மடிந்தன: காரைக்காலில் கரை ஒதுங்கிய விலங்குகளின் உடல்கள்
x
தினத்தந்தி 18 Nov 2018 12:06 AM GMT (Updated: 18 Nov 2018 12:06 AM GMT)

காரைக்கால் கடல் பகுதியில் மான்கள், காட்டுப்பன்றிகள், குதிரைகள், செந்நாய்கள் இறந்து கரை ஒதுங்கின. அவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தி புதைத்தனர்.

காரைக்கால்,

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப் போட்டது. காரைக் காலும் பலத்த சேதத்துக்குள்ளானது. புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகளும் பறந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமாயின. காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு வந்த தூர்வாரும் கப்பல் மேலவாஞ்சூர் அருகே தரை தட்டி நின்றது. அந்த கப்பலில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், காரைக்கால் கடலோர கிராம பகுதிகளில் பலியான விலங்குகளின் உடல்கள் கரை ஒதுங்கி கிடந்தன. இதைப் பார்த்து மீனவ மற்றும் கடலோர பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விலங்குகளின் உடல்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

காரைக்கால் கடலோர பகுதியில் இருந்து 51 மான்கள், 11 காட்டுப்பன்றிகள், செந்நாய்கள், குதிரை, வரி குதிரை, நரி மற்றும் பறவைகள் செத்துக் கிடந்தன. இவை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டன.

இந்த நடவடிக்கைகளை மாவட்ட கால்நடைத்துறை அதிகாரி லதா மங்கேஷ்கர், காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் மேற்கொண்டனர். கரை ஒதுங்கிய விலங்குகளின் உடல்கள் கடலோர பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

இந்த விலங்குகள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை காடுகளில் இருந்து மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி இறந்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

Next Story