சூளகிரியில் பயங்கரம்: கழுத்தை அறுத்து பெண் படுகொலை


சூளகிரியில் பயங்கரம்: கழுத்தை அறுத்து பெண் படுகொலை
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 PM GMT (Updated: 18 Nov 2018 5:54 PM GMT)

சூளகிரியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார்.

சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக ஆடு, மாடுகளை மேய்க்க சென்றவர்கள் பார்த்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இறந்து கிடந்த பெண்ணிற்கு 40 வயது இருக்கும். ரோஸ் மற்றும் சந்தன நிறம் கலந்த சேலையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். மேலும் அவரது உடல் அருகில் ஒரு பர்ஸ் இருந்தது. அதில் ஒரு செல் நம்பர் இருந்தது. அது தர்மபுரி நம்பராக இருக்கலாம் என தெரிகிறது. அந்த பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.


மேலும் பெண்ணின் உடல் அருகில் பெரிய அளவிலான கல் ஒன்றும் இருந்தது. இதனால் அந்த பெண் கழுத்தை அறுத்தும், கல்லை போட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பெண் கொலை செய்யப்பட்டு சில நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.

இதனால் அவரது உடல் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கொலையுண்ட பெண் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story