‘கஜா’ புயலால் மின்கம்பங்கள்-மரங்கள் சாய்ந்தன: மன்னார்குடியில் 4-வது நாளாக மின்தடை குடிநீர் தட்டுப்பாடு


‘கஜா’ புயலால் மின்கம்பங்கள்-மரங்கள் சாய்ந்தன: மன்னார்குடியில் 4-வது நாளாக மின்தடை குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 7:11 PM GMT)

‘கஜா’ புயலால் மின்கம்பங்கள்-மரங்கள் சாய்ந்ததால் மன்னார்குடியில் 4-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ‘கஜா’ புயல் காரணமாக கடந்த 15-ந் தேதி இரவு மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. 4-வது நாளாக நேற்றும் மன்னார்குடியில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீரை ஏற்றி குடிநீர் வினியோகம் செய்தாலும் தட்டுப்பாட்டை போக்க முடியவில்லை. பொதுமக்களில் சிலர் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து தங்கள் வீட்டு ஆழ்குழாய் நீரை மேல்நிலை தொட்டியில் நிரப்பி வருகின்றனர். ஆனாலும் பலர் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர்.

மின் இணைப்பு வழங்கினால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.மன்னார்குடியில் சீரமைப்பு பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மின் இணைப்பு வழங்கப்படுவது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது:-

வெளிமாவட்டங்களில் இருந்து மன்னார்குடி மின் கோட்டத்திற்கு 500 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு புயலால் விழுந்த மின் கம்பங்களையும், அறுந்து விழுந்த மின் கம்பிகளையும் சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளதால் மின் இணைப்பை மீண்டும் வழங்குவதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் சீரமைப்பு பணியை முடித்து மன்னார்குடி நகருக்கு நாளை(அதாவது இன்று) மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொதுமக்கள் கூறுகையில், விரைவில் மின் இணைப்பை வழங்க வேண்டும். அப்போது தான் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக மக்கள் படும் இன்னல்கள் தீரும். கூடுதல் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே விரைவில் மின் இணைப்பு வழங்க முடியும் என்றனர்.

Next Story