ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம மக்கள் சாலைமறியல் சீராக குடிநீர் வழங்க கோரிக்கை


ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம மக்கள் சாலைமறியல் சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2018 10:00 PM GMT (Updated: 19 Nov 2018 8:13 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் அருகே சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று மதியம் காலி குடங்களுடன் அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஸ்ரீவைகுண்டம்-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

உடனே ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருக பெருமாள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூருக்கு சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story