புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஆய்வு


புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 8:18 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

கீரனூர்,

குளத்தூர் பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது குளத்தூர் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மீது சாய்ந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மேலும் மின்வார பணிகள் குறித்து கேட்டறிந்தனர். கீரனூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் இணைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. வெளியூரிலிருந்து வந்திருந்த மின்சார பணியாளர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பல்வேறு கிராமங்களில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பிகள், மின்மாற்றிகளை பழுது பார்த்து வருகின்றனர். கீரனூர் மின்வாரிய அதிகாரிகள் பாலு, ஆயிஷா பேகம் தலைமையில், மின்வாரிய ஊழியர்கள் பணிகளை செய்து வருகின்றனர். 80 சதவீதம் பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் பேரூராட்சி மின்ஊழியர் சோலை என்பவர் இரவு , பகலாக அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பிகளை சரி செய்து வருகிறார். அவருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் டீ, சாப்பாடு உள்ளிட்டவைகள் வழங்கி உபசரித்தனர். மேலும் அவர் மின் கம்பத்தின் மீது ஏறி மின் கம்பிகளை கைகளால் தொட்டு பிடித்தப்படி இணைப்பை கொடுத்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது

விராலிமலை கிழக்கு ஒன்றியம் மண்டையூர், மாத்தூர், களமாவூர், ஆவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்பகுதிகளில் நடைபெறும் மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தாசில்தார் சார்லஸ் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். மண்டையூரில் அமைச்சர் விஜயபாஸ்கரை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு தங்களது வீடுகள் சேதமடைந்துள்ளது குறித்து முறையிட்டனர்.

Next Story