லண்டன் செல்ல விசா கிடைக்காததால்: வாலிபர் தற்கொலை


லண்டன் செல்ல விசா கிடைக்காததால்: வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2018 10:00 PM GMT (Updated: 19 Nov 2018 8:52 PM GMT)

மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தும் லண்டன் செல்ல விசா கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

போத்தனூர், 


கோவை போத்தனூரை சேர்ந்தவர் பிரின்ஸ். இவருடைய மகன் ரீகன் (வயது 30). இவர் லண்டனில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். பின்னர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் அவருக்கு மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அவர் வேலையில் சேர்வதற்கு முன்பு விடுமுறையில் 2 மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்தார். பின்னர் அவர் லண்டனுக்கு செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவர் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரீகனுக்கு வேலை கொடுத்த நிறுவனம் அவரை உடனடியாக பணியில் சேருமாறு அழைப்பு விடுத்தது. ஆனால் அவருக்கு லண்டன் செல்ல விசா கிடைக்கவில்லை. இதனால் அவருடைய வேலையும் ரத்தானது. இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் சில நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரீகன் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த உறவினர்கள், ரீகன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரீகன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

Next Story