புயலால் மின்கம்பங்கள் சாய்ந்தன: 5-வது நாளாக இருளில் மூழ்கியுள்ள கிராமங்கள் பொதுமக்கள் அவதி


புயலால் மின்கம்பங்கள் சாய்ந்தன: 5-வது நாளாக இருளில் மூழ்கியுள்ள கிராமங்கள் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 19 Nov 2018 10:45 PM GMT (Updated: 19 Nov 2018 9:57 PM GMT)

கீழையூர் ஒன்றியத்தில் புயலால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் 5-வது நாளாக கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேளாங்கண்ணி,

கஜா புயல் நாகை-வேதாரண்யம் இடையே கடந்த 16-ந்தேதி அதிகாலையில் கரையை கடந்தது. இந்த புயலின் கோரதாண்டவத்தால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் மின்கம்பங்களும் சேதமடைந்தன. நாகை மாவட்டம் கடற்கரை பகுதிகளான பிரதாபராமபுரம், விழுந்தமாவடி, காமேஸ்வரம், வேட்டைக்காரனிருப்பு மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை மரம், மா மரம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. கஜா புயலால் அனைத்து மரங்களும் சாய்ந்துள்ளன.

சாலைகளே தெரியாத அளவிற்கு மரங்கள் சாய்ந்து கிடந்தன. மின்கம்பிகளும் சாலைகளில் அறுந்து கிடக்கின்றன. வீடுகளில் மேல் போடப்பட்ட மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் மரக்கிளைகள் முறிந்து வீடுகள் மீதும் விழுந்தது. இதனால் சாலையோரங்களில் எங்கு பார்த்தாலும் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளாகவே காட்சியளித்தன.

இந்த புயலினால் நாகை மாவட்டத்தில் கடந்த 15-ந்தேதி இரவு முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று 5-வது நாளாக கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டிக்கு சிவகாசி, மதுரை, விருதுநகர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்களை சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story