திருமணமான 4 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்


திருமணமான 4 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 Nov 2018 11:15 PM GMT (Updated: 21 Nov 2018 5:37 PM GMT)

கிருஷ்ணகிரியில் திருமணமான 4 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவரது மகள் பிரியங்கா (25). எம்.ஏ., பி.எட்., பட்டதாரி. இவருக்கும் தர்மபுரி மாவட்டம் குள்ளனூரை சேர்ந்த அறிவழகன் (27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அறிவழகன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கணவன் - மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி பிரியங்கா கணவரிடம் கோபித்து கொண்டு கிருஷ்ணகிரியில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தற்கொலைக்கு தூண்டியதாக கூறியும், அறிவழகனை கைது செய்ய வலியுறுத்தியும் பிரியங்காவின் உறவினர்கள் நேற்று அரசு மருத்துவமனைக்கு முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தற்கொலை குறித்து உதவி கலெக்டர் விசாரிக்க உள்ளதால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பழையப்பேட்டை சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story