‘கஜா’ புயல் நிவாரணமாக ரூ.10 லட்சம் உதவி நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்


‘கஜா’ புயல் நிவாரணமாக ரூ.10 லட்சம் உதவி நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 5:57 PM GMT)

‘கஜா’ புயல் நிவாரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதல்கட்டமாக ரூ.10 லட்சம் உதவி வழங்குவது என நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான காந்திசெல்வன் தீர்மானங்களை விளக்கி பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் வாரியாக கூட்டங்கள் நடத்தியும், சார்பு அணி கூட்டங்கள் நடத்தியும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை தி.மு.க. கோட்டையாக மாற்றுவது.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்குவது. மேலும் புயல் நிவாரணம் பெறும் வகையில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் நிவாரண பொருட்கள் சேகரிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரஸ்வதி, கே.பி.ராமசாமி, பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாநில சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர் விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன்தாஸ், நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story