துவரங்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கியதால் மின்கம்பத்தில் பிணமாக தொங்கிய அ.தி.மு.க. பிரமுகர்


துவரங்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கியதால் மின்கம்பத்தில் பிணமாக தொங்கிய அ.தி.மு.க. பிரமுகர்
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 9:20 PM GMT)

துவரங்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கியதில் பலியான அ.தி.மு.க.பிரமுகர் மின்கம்பத்திலேயே பிணமாக தொங்கினார்.

வையம்பட்டி, 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு வழங்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர குடியிருப்பு பகுதிகளில் உள்ள மின்கம்பிகள் (சர்வீஸ் வயர்) அறுந்து விழுந்ததால் அவற்றை சரிசெய்யும் பணியில் அந்தந்த குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

துவரங்குறிச்சியை அடுத்த உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 36). அ.தி.மு.க. இளைஞர் பாசறை கிளை செயலாளரான இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று, இவர் உசிலம்பட்டி அருகே மான்பாஞ்சாம்பட்டி என்ற இடத்தில் மின்கம்பத்தில் ஒரு வீட்டிற்கான மின் இணைப்பு கம்பியை இழுத்து கட்டி விட்டு கீழே இறங்க முயன்றார்.

அப்போது மின்கம்பத்தில் உள்ள உயர் அழுத்த மின்கம்பியில் வெங்கடாசலபதியின் தோள்பட்டை உரசியது. இதில் அவர் மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்திலேயே பிணமாக தொங்கினார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து பதறித் துடித்ததோடு அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதையடுத்து சம்பவம் பற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கும், துவரங்குறிச்சி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த வெங்கடாசலபதி அந்த பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததால் அவரது இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story