ஆந்திரா முதல் ராமநாதபுரம் வரை 1,250 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து புறா சாதனை


ஆந்திரா முதல் ராமநாதபுரம் வரை 1,250 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து புறா சாதனை
x
தினத்தந்தி 25 Nov 2018 10:45 PM GMT (Updated: 25 Nov 2018 7:19 PM GMT)

ராமநாதபுரத்தில் நடைபெற்ற புறா பந்தய போட்டியில் ஆந்திரா மாநிலம் பாலர்ஷா முதல் ராமநாதபுரம் வரையிலான 1,250 கிலோ மீட்டர் தூரத்தினை கடந்து புறா புதிய சாதனை படைத்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் புறா சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புறா பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 14–வது ஆண்டு புறா பந்தயம் 7 கட்டங்களாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஆந்திரா மாநிலம் பாலர்ஷா பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 1,250 கிலோ மீட்டர் தூரத்வீழீ வீரமணி என்பவரின் புறா 104 மணி நேரம் 37 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதேபோல பெத்தப்பள்ளி பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை அப்துல் சுக்கூர் என்பவரின் புறா 65 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் ஆந்திரா மேடாரமெட்லா பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 720 கிலோ மீட்டர் தூரத்தை சிவாஜி கணேசன் என்பவரின் புறாக்கள் முதல் மற்றும் 3–வது இடத்தையும், சரவணக்குமார் என்பவரின் புறா 2–வது இடத்தையும் பிடித்தது. ஆந்திரா நாயுடுபேட்டை பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 540 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்து ரூபஸ் என்பவரின் புறா முதலிடமும், அப்துல் சுக்கூர் என்பவரின் புறா 2–வது இடமும், சரவணக்குமார் என்பவரின் புறா 3–வது இடமும் பிடித்தன.

இதேபோல சென்னை தாம்பரம் முதல் ராமநாதபுரம் வரையிலான 415 கிலோ மீட்டர் தூரத்தை விரைவாக கடந்து ரூபஸ் என்பவரின் புறா முதல் இடத்தையும், அப்துல் சுக்கூர் என்பவரின் புறா முறையே 2 மற்றும் 3–வது இடமும் பிடித்தன. விழுப்புரம் முதல் ராமநாதபுரம் வரையிலான 290 கிலோ மீட்டர் தூரத்தை விரைவாக கடந்து அப்துல்சுக்கூர் என்பவரின் புறா முதல் மற்றும் 3–ம் இடத்தையும், ஆரிபு என்பவரின் புறா 2–வது இடத்தையும் பிடித்தது. தஞ்சை முதல் ராமநாதபுரம் வரையிலான 160 கிலோ மீட்டர் தூரத்தை ராஜேசுவரன் என்பவரின் புறாக்கள் விரைவாக கடந்து வந்து முதல் மற்றும் 2–வது இடத்தையும் பிடித்தன. அப்துல் சுக்கூர் என்பவரின் புறா 3–வது இடம் பிடித்தது.

இந்த ஆண்டில் தொலைதூர போட்டியான 1,250 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த வீரமணி என்பவரின் புறாவுக்கு தொலைதூர பந்தய சாம்பியன் பட்டமும், அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்ற அப்துல் சுக்கூர் என்பவரின் புறாவுக்கு இந்த ஆண்டிற்கான சாம்பியன் பட்டமும் வழங்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா ராமநாதபுரம் புறா சங்க தலைவர் பாலா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பழனியப்பன், கராத்தே ஈஸ்வரன், தன்சிங், கமல், ஐவல்பிளிப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பொருளாளர் ராஜேசுவரன் வரவேற்று பேசினார். புறா சங்க நிறுவனர் வில்ப்ரட் சாம்பியன் கோப்பையை வழங்கி பாராட்டினார். முடிவில் செயலாளர் ரூபஸ் நன்றி கூறினார்.


Next Story