பட்டு வளர்ச்சித்துறை மூலம் 194 விவசாயிகளுக்கு ரூ.76 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்


பட்டு வளர்ச்சித்துறை மூலம் 194 விவசாயிகளுக்கு ரூ.76 லட்சம் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:00 PM GMT (Updated: 25 Nov 2018 7:38 PM GMT)

பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 194 விவசாயிகளுக்கு ரூ.76 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம், 

தமிழக அரசு பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாநில வளர்ச்சி திட்டத்தின் கீழ் மல்பெரி நடவிற்கு மொத்தம் 91 விவசாயிகளுக்கு 129.28 ஏக்கருக்கு ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் 23 விவசாயிகளுக்கு 36.62 ஏக்கருக்கு ரூ.10 லட்சத்து 68 ஆயிரமும், தனிப்புழு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 44 விவசாயிகளுக்கு ரூ.32 லட்சத்து 93 ஆயிரத்து 500-ம், பட்டுப்புழு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 36 விவசாயிகளுக்கு ரூ.18 லட்சத்து 90 ஆயிரமும் ஆக மொத்தம் 194 பேருக்கு ரூ.76 லட்சத்து 12 ஆயிரம் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story