குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Nov 2018 11:00 PM GMT (Updated: 26 Nov 2018 4:14 PM GMT)

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, மொத்தம் 369 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.53 ஆயிரத்து 595 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். அதைத்தொடர்ந்து தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தேவிகாராணி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story