குன்றத்தூர் அருகே பெண் மர்மச்சாவு கணவர் கைது


குன்றத்தூர் அருகே பெண் மர்மச்சாவு கணவர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2018 11:15 PM GMT (Updated: 27 Nov 2018 5:43 PM GMT)

குன்றத்தூர் அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பெரியார் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்சினி (29), இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியதர்சினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பிரியதர்சினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மது குடிக்கும் பழக்கம் உடைய சரவணன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலை செய்யும் இடத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சரவணன் ஒரு கண்ணை இழந்து விட்டார்.

இதையடுத்து மது குடிக்க வேண்டாம் என்று சரவணனிடம், பிரியதர்சினி கூறியதாக தெரிகிறது. அதன் பின்னர் மதுவை வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்து வந்தார். அதன் பின்னரும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. பிரியதர்சினியின் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரியதர்சினியின் சாவில் மர்ம இருப்பதாக அவரது உறவினர்கள் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:- சரவணன் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமை படுத்தி வந்தார். சம்பவத்திற்கு முன்பு சரவணன் குடும்பத்தினர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ரூ.40 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதன் காரணமாக பிரியதர்சினியை கொலை செய்து தற்கொலை போல் நாடகம் ஆடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரியதர்சினியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சரவணன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story