பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Nov 2018 10:30 PM GMT (Updated: 27 Nov 2018 6:47 PM GMT)

பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், உயிர் பலிகளை தடுக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பெருங்களத்தூர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு ஐ.டி. நிறுவனங்கள் இயங்குவதால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெருங்களத்தூர் ரெயில் நிலையம் வந்து செல்கின்றனர்.

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துவரும் பலர் பெருங்களத்தூர் பகுதியில்தான் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தினமும் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலை பயன்படுத்தி சென்று வருகிறார்கள்.

தென் மாவட்டங்களில் இருந்து தினமும் சென்னைக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெருங்களத்தூரில் இறங்கி, ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில்களில் சென்னை சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர்.

மக்களின் எண்ணிக்கையும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதால் பெருங்களத்தூர் ரெயில் நிலைய பகுதியில் ரெயில்வே கேட் மூடப்பட்டால் பெரும்அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உயிர் பலிகளும் அதிகளவில் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பாதியில் நிற்கிறது.

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், அந்த பகுதி மக்கள் அரை கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டியது உள்ளது. இதை தவிர்க்க ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து செல்வதுதான் மாற்று வழி என்ற நிலையில் ரெயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயற்சிக்கும்போது ரெயிலில் அடிபட்டு வாரத்துக்கு 2 பேராவது உயிரிழந்து வருகின்றனர்.

உயிர் பலி ஏற்படுவதை தடுக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2½ கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும் பணி 9 மாதங்களில் நிறைவடையும் என அறிவித்து வேலையை தொடங்கிய ரெயில்வே நிர்வாகம், மழைக்காலம் என பல்வேறு காரணங்களை கூறி பணிகளை நிறைவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.

அதன்பிறகு இந்த ஆண்டு பிப்ரவரிக்குள் பணிகள் நிறைவடையும் என அறிவித்த நிர்வாகம், பிப்ரவரி மாதம் முடிந்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளதாக பெருங்களத்தூர் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதி இருக்கும் பணிகளை உடனடியாக தொடங்கி விரைவாக முடித்து சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தால் மட்டுமே அந்த பகுதியில் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

எனவே ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story