விழுப்புரத்தில்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரத்தில்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Nov 2018 9:45 PM GMT (Updated: 28 Nov 2018 6:19 PM GMT)

விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம், 

விழுப்புரம் அரசு ஊழியர் நகரில் பிரசித்தி பெற்ற ஓம்கார செல்வகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கதவை பூட்டிவிட்டு பூசாரி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், இந்த கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர். அந்த உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பின்னர் அந்த மர்ம நபர்கள், பக்கத்து தெருவான தந்தை பெரியார் நகருக்கு சென்று அங்கிருந்த மற்றொரு விநாயகர் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்துள்ளனர்.அந்த சமயத்தில் அந்த வழியாக பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நேற்று காலை விழுப்புரம் தாலுகா போலீசார், அந்த 2 கோவில்களுக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story