ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை தாமதமாவது ஏன்? - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி


ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை தாமதமாவது ஏன்? - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2018 9:30 PM GMT (Updated: 28 Nov 2018 7:01 PM GMT)

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலை தாமதமாவது ஏன்? என்று விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம், 

சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதில்களும் பின்வருமாறு:-

கேள்வி:- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை விடுதலை செய்து இருக்கிறீர்கள். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க ஏன் தாமதமாகிறது?.

பதில்:- 7 பேரை விடுவிக்கக்கோரி நாங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். ஆளுநர் முடிவை பொறுத்துதான் மேல் நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி:- அரசு மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச திட்டங்களை திரைப்படத்துறையினர் விமர்சனம் செய்கிறார்களே?

பதில்:- ஏழை, எளிய மக்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொதுமக்களுக்கு இலவச திட்டங்கள் மூலம் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்களும் பயன் அடைந்துள்ளனர். சினிமாவில் தங்களுடைய படங்கள் ஓடவேண்டும் என்பதற்காக மக்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை விமர்சனம் செய்கிறார்கள்.

அரசின் திட்டங்களை கொச்சைப்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் தங்களது படத்திற்கு வரிச்சலுகை வேண்டாம் என்று கூற முடியுமா? ஏழை, எளிய மக்களுக்கு சலுகைகள் வழங்கக்கூடாது என்று பேசுபவர்கள், தங்களது படத்திற்கு மட்டும் வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று கூறுகின் றனர்.

Next Story