கஜா புயல்: மருத்துவ முகாம் மூலம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் பயனடைந்தனர் முதல்-அமைச்சர் பேட்டி


கஜா புயல்: மருத்துவ முகாம் மூலம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் பயனடைந்தனர் முதல்-அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2018 11:15 PM GMT (Updated: 28 Nov 2018 7:07 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலுக்கு பிறகு 1 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் மருத்துவ முகாம் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார். பின்னர் திருவாரூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் 34 ஆயிரத்து 326 குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டு 199 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த புயலினால் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் 3 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 5 ஆயிரத்து 77 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

25 ஆயிரத்து 652 ஓட்டு வீடுகள் பாதிப்படைந்து உள்ளன. புயலுக்கு பின்னர் சுகாதாரத்துறை மூலம் 1,720 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் பயனடைந்தனர்.

ஊரக பகுதிகளில் குடிநீர் பிரச்சினை, மின்சாரம் பாதிப்பு உள்ள இடங்களில் 232 ஜெனரேட்டர்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகர பகுதிகளில் 28 இடங்களில் ஜெனரேட்டர்கள் குடிநீர் வினியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நகர பகுதிகளில் 46 குடிநீர் டேங்கர் லாரிகள் மூலமும், ஊரக பகுதிகளில் 89 குடிநீர் டேங்கர் லாரிகள் மூலமும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story