புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது முதல்-அமைச்சர் பேட்டி


புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது முதல்-அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2018 11:00 PM GMT (Updated: 28 Nov 2018 7:21 PM GMT)

புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று திருவாரூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார். நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் திருவாரூர் மாவட்டத்தில் குடிசை வீடுகளை இழந்து சாலையோரம் நின்று கொண்டு இருந்த பெண்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது பெண்கள், நாங்கள் வசித்து வந்த குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டன. எங்களுக்கு உடனடியாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். முகாமில் இருந்து வீடு திரும்பும் வரை உணவு, குடிநீர் முறையாக கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்ட முதல்-அமைச்சர், உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

விவசாயிகள், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய முதல்-அமைச்சர், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து தென்பாதி கிராமத்திற்கு சென்றார்.

அங்கு பிச்சன்கோட்டகத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவரின் 4 ஏக்கர் நிலத்தில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி கிடப்பதை பார்த்த முதல்-அமைச்சர், வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வயலுக்குள் இறங்கி அழுகிய நெற்பயிர்களை பார்வையிட்டு இருதயராஜூக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கட்டிமேடு அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அவருக்கு சேத விவரங்கள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விளக்கினார். இதை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, அந்த பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து அங்கு 750 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து, முதல் கட்டமாக 10 பயனாளிகளுக்கு நிவாரண பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 350 பேருக்கு நிவாரண பெட்டகத்தை வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, சிவபுண்ணியம் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், முதல்- அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் திருத்துறைப்பூண்டியில் சாய்ந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டார். வடபாதி ஆற்றங்கரையில் புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மணலியில் முருகேசன் என்பவரின் 2 ஏக்கர் நிலத்தில் சாய்ந்து கிடந்த நெற்பயிர்களை பார்வையிட்டார்.

திருவாரூர்-நாகை புறவழி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த 607 பேருக்கு ரூ.73 லட்சத்து 97 ஆயிரத்து 600 மதிப்பிலான நிவாரண பெட்டகத்தை வழங்கினார். திருவாரூர் மாவட்டம் மேலமருதூரில் மாலை 3.45 மணிக்கு தொடங்கிய முதல்-அமைச்சர் தனது பயணத்தை திருவாரூரில் இரவு 7.15 மணிக்கு நிறைவு செய்தார். முதல்-அமைச்சருடன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.காமராஜ், செல்லூர் .ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். திருவாரூரில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல் பாதித்த கிராமப்புற பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று கூறுவது தவறானது. எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நிவாரண உதவிகளை அம்மாவின் அரசு வழங்கி வருகிறது.

தமிழக அரசு மட்டுமல்லாது அ.தி.மு.க.வினரும் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு எந்தவித குறையும் இல்லாத அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story