கஜா புயலால் வீட்டை இழந்த முதியவருக்கு ராகவா லாரன்ஸ் உதவி


கஜா புயலால் வீட்டை இழந்த முதியவருக்கு ராகவா லாரன்ஸ் உதவி
x
தினத்தந்தி 28 Nov 2018 11:00 PM GMT (Updated: 28 Nov 2018 8:51 PM GMT)

கஜா புயலால் வீட்டை இழந்த முதியவருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி செய்தார்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 68). இவர் வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். காரில் 515 இலவச கார் என்று எழுதி வைத்துள்ளார். சுனாமி பாதிப்பு ஏற்பட்டு தமிழகத்தின் கடலோர மக்கள் பாதிக்கப்பட்டபோது கணேசன் தனது காரிலே கிராமம் கிராமமாக சென்றுமக்களிடம் நிதி வசூல் மற்றும் நிவாரணபொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரே கொண்டு சென்று நேரடியாக வழங்கினார்.

இதேபோல் தானே புயலால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது ரூ.5 லட்சம் நிவாரணம் வசூல் செய்தும், சென்னையில் வெள்ளபாதிப்பு ஏற்பட்ட போது பல லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட் களை திரட்டி அந்த பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தார்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கேரள மாநிலமே தத்தளித்த போது, அவர்களுக்காக நிவாரண பொருட்களை சேகரிக்க களமிறங்கிய கணேசன் ஆலங்குடி, ஆலங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒலி பெருக்கியுடன் கூடிய தனது காரில் இருவரை அழைத்து கொண்டு நிவாரண பொருட்களை சேகரித்து லாரி மூலம் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். இவர் நிவாரணஉதவி கேட்டு செல்லும் இடமெல்லாம் மக்களும் தயங்காமல் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர்.

சுனாமி, வெள்ளம், தானே புயலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்காக உதவிய கணேசனின் சேவை பாராட்டுக்குரியது. இந்நிலையில் ஆலங்குடியில் உள்ள இவரது வீட்டின் மேற்கூரையும் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் முற்றிலும் சேதமடைந்தது. இதையறிந்த திரைப்பட நடிகர் ராகவாலாரன்ஸ், கணேசனுக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித்தருவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஆலங்குடிக்கு வந்த ராகவாலாரன்ஸ் கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து கணேசனுக்கு தனது சொந்த செலவில் வீடுகட்டி தருவதாகவும், தான் (ராகவா லாரன்ஸ்) அங்கேயே தங்கியிருந்து என்ஜினீயர்களை சந்தித்து வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை கேட்க போவதாகவும் தெரிவித்தார். மேலும் வீடுகட்டுவதற்கு எவ்வளவு தொகை கணக்கீடப்படுகிறதோ அதற்கான காசோலையை கொடுப்பதாக கணேசனிடம் கூறியுள்ளார். 

Next Story