கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்


கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 28 Nov 2018 11:15 PM GMT (Updated: 28 Nov 2018 11:15 PM GMT)

கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 40 கிலோ கஞ்சா பார்சல்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பிராட்வே,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை வழியாக பெங்களூரு நோக்கி நேற்று காலை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் உள்ள 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் மர்மமான முறையில் 5 பைகள் இருப்பதாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரெயில்வே போலீசார், கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்ற பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் ஏறி சோதனை செய்தனர்.

அந்த பைகளில் கஞ்சா பார்சல்கள் இருப்பது தெரிந்தது. 18 பார்சல்களில் இருந்த 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் தலைமையில் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் விரைந்து வந்தனர். அவர்களிடம் பறிமுதலான கஞ்சா பார்சல்கள் ஒப்படைக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா பார்சல்களை அனுப்பியது யார்?, எங்கிருந்து, எங்கே கடத்தி செல்ல முயன்றனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story