குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கென தனி அறை ஒதுக்கி பாலியல் தொல்லை போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்


குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கென தனி அறை ஒதுக்கி பாலியல் தொல்லை  போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:30 PM GMT (Updated: 29 Nov 2018 2:40 PM GMT)

குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகளுக்கென தனி அறை ஒதுக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை திண்டிவனம் சாலை நாச்சிப்பட்டு கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. அதனை தம்பதிகளான லூபன்குமார், மெர்சி மற்றும் மணவாளன் ஆகியோர் நிர்வகித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 17–ந் தேதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திடீரென காப்பகத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அங்கு அடிப்படை வசதிகள் இல்லாதது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அங்குள்ள குழந்தைகளை அவர் அரசு வரவேற்பு இல்லத்துக்கு மாற்றினார்.

பின்னர் கலெக்டர் நடத்திய விசாரணையில், அந்த குழந்தைகளில் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூபன்குமார், மெர்சி, மணவாளன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மாணவிகள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட பெண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

அந்த காப்பகத்தில் 6 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 40–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அதில் 3 சிறுமிகள் தாய், தந்தையை இழந்தவர்கள். அவர்களை அவர்களின் உறவினர்கள் இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அந்த 3 சிறுமிகள் அதிகளவில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி உள்ளனர்.

3 சிறுமிகள் மட்டும் தங்க தனி அறை அமைத்துள்ளனர். அந்த அறையில் தான் அவர்கள் தங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். பிற குழந்தைகளோடு தங்காமல் அவர்களை பிரித்து வைத்துள்ளனர். 3 சிறுமிகளிடம் லூபன்குமார் பாலியல் சீண்டல்கள் அதிகளவு செய்துள்ளார். இதை மாணவிகள் என்னிடம் கூறும்போது கதறி அழுதவாறு கூறினர்.

அவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளான எங்களால் கூட அதை ஏற்கமுடியவில்லை. கலெக்டர் கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தி எங்களை காப்பாற்றினார் என்று சிறுமிகள் கூறுகின்றனர்.

நிர்வாகிகள் கொடுக்கும் கட்டளைகளை ஏற்காவிடில் பிற வேலைகளை வாங்கி உள்ளனர். இந்த குற்றவாளிகள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தகவலை கூறிய அந்த பெண் அதிகாரி பேச முடியாமல் கதறி அழுதார்.

கலெக்டர் கந்தசாமியிடம் கேட்டபோது, ‘காப்பகத்தில் இருந்த 3 சிறுமிகளுக்கு லூபன்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


Next Story