பெரம்பலூரில் தலையாட்டி சித்தருக்கு கொட்டும் மழையில் குருபூஜை திரளானவர்கள் கலந்து கொண்டனர்


பெரம்பலூரில் தலையாட்டி சித்தருக்கு கொட்டும் மழையில் குருபூஜை திரளானவர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:30 PM GMT (Updated: 29 Nov 2018 7:25 PM GMT)

பெரம்பலூரில் தலையாட்டி சித்தருக்கு கொட்டும் மழையில் நடைபெற்ற குருபூஜையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் ஜீவராசிகளான நாய், பறவைகள், விலங்கினங்களை நேசித்து அன்பும், அரவணைப்பும் தந்து முக்தி பெற்றவர் ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர். தனது மருத்துவத்தின் உதவியால் பிரபல சினிமா உலகத்தினரின் தீராத வியாதிகளை தீர்த்துவைத்து புகழ்பெற்றவர். இவருக்கு பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் அருகே வெங்கடாஜலபதி நகரில் சமாதி (அதிஸ்டானம்) உள்ளது. இதேவளாகத்தில் மடமும், சாதுக்கள் ஆசிரமமும் அமைந்துள்ளது. ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர் மடத்தில் 30-வது ஆண்டு சித்தர் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி, துர்க்கை, தன்வந்திரி, 210 சித்தர் மகாஹோமங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து அய்யனார், வக்கனையார் பூஜை நடந்தது. தலையாட்டி சித்தர் உருவச்சிலைக்கும், துர்க்கைஅம்மன் மற்றும் சிவலிங்கத்திற்கும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தன. இதனை தொடர்ந்து தலையாட்டி சித்தர், துர்க்கை உருவ சிலைகள் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொட்டும் மழையில் நடந்த இந்த விழாவில் சதுரகிரி சுவாமி காளிமுத்துசாமி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிவயோகி பெருமாள், ராஜேந்திரன், எளம்பலூர் பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் ராஜகுமார்சுவாமி, இளம்தவயோகிதவசிநாதன் ஆகியோர் யாகசாலை பூஜைகளை நடத்தி வைத்தனர். குருபூஜையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரமகாலிங்கம், சித்தர் மற்றும் திரளான சாதுக்கள், சிவனடியார்கள், சித்தரின் சீடர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற் கான ஏற்பாடுகளை தலையாட்டி சித்தர் ஆசிரம நிர்வாகியும், பரம்பரை அறங்காவலருமான காமராஜ், அறங்காவலர்கள் நந்தேஸ்வரன், சதீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story