புயல் பாதித்த 7 மாவட்டங்களில் தொற்று நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை அமைச்சர் பேட்டி


புயல் பாதித்த 7 மாவட்டங்களில் தொற்று நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 29 Nov 2018 11:00 PM GMT (Updated: 29 Nov 2018 7:44 PM GMT)

புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இதுவரை தொற்று நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கஜா புயல் மீட்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது மின் ஆளுமை ஆணையர் சந்தோஷ் மிஷ்ரா, கலெக்டர் கணேஷ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் மீட்பு பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் 4 லட்சத்து 30 ஆயிரம் மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்பாதைகள் பாதிக்கப்பட்டு இருந்தது. இதில் 477 கிலோ மீட்டர் தூரம் மின்இணைப்பு சரிசெய்யப்பட்டு உள்ளது. 8 ஆயிரத்து 337 மின்மாற்றிகள் பழுதடைந்ததில் 5 ஆயிரத்து 209 மின்மாற்றிகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முழுவதுமாக மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. கிராம பகுதிகளில் தொடர்ந்து மின்இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் 66 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கஜா புயலினால் டெல்டா பகுதி மாணவர்களின் பாதிப்பை கருதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச கால அவகாசம் தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கேட்கப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) மாலை நாம் கேட்டபடி நமக்கு சாதகமான பதில் மத்திய அரசிடம் இருந்து வரும். புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இதுவரை தொற்று நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை. சுகாதாரத் துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சாரமும் எவ்வளவு தூரம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை பார்க்க புதிய செயலி கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் மின்வாரிய ஊழியர்களின் முயற்சியால் ஒவ்வொரு நாளும் 400 கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

Next Story