மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.80 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் தகவல்


மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.80 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2018 11:00 PM GMT (Updated: 1 Dec 2018 10:03 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.80¼ லட்சத்தில் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

மலைக்கோட்டை,

திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2017-18, 2018-19-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டினன் வரவேற்று பேசினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு, செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 520 பேருக்கும், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 1,257 மாணவர்களுக்கும், அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 406 மாணவ, மாணவிகளுக்கு என மொத்தம் 2,183 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

கருவில் இருந்து தன்னுடைய பள்ளி பருவம் முடிந்து, உயர்கல்வி முடிந்து வேலைக்கு செல்லும் வரை அரசு என்னென்ன திட்டங்களை, சலுகைகளை செய்துள்ளது என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். இவையெல்லாம் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவரது சீரிய சிந்தனையில் உதித்த திட்டங்கள் ஆகும். ஜெயலலிதா வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செயல்படுகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் 2017-18, 2018-19-ம் ஆண்டுக்கு மட்டும் 47 ஆயிரத்து 208 விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்த சைக்கிள்களின் மொத்த செலவு தொகை ரூ.80 லட்சத்து 31 ஆயிரத்து 717 ஆகும். மாணவ-மாணவிகளின் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலேயே விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது.

விலையில்லா சைக்கிள் வழங்குவதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.437 கோடியே 86 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்கிறது. மாணவ-மாணவிகள் மேலும் நல்ல கல்வி பயின்று தங்களின் பெற்றோருக்கும், உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த குருவான ஆசிரியர்களுக்கும், நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசுக்கும் தங்களின் பூரண ஒத்துழைப்பை நல்கிட வேண்டுகிறேன்.

சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளியாகும். எனவே, எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பள்ளிக்கு மேலும் கூடுதலாக முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராமசாமி, பள்ளிகளின் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story