பல்லடம் அருகே நீலியம்மன் கோவிலில் ஐம்பொன் சாமி சிலை கொள்ளை உண்டியலையும் உடைத்து பணத்தை அள்ளிச்சென்ற மர்ம ஆசாமிகள்


பல்லடம் அருகே நீலியம்மன் கோவிலில் ஐம்பொன் சாமி சிலை கொள்ளை உண்டியலையும் உடைத்து பணத்தை அள்ளிச்சென்ற மர்ம ஆசாமிகள்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:39 PM GMT (Updated: 1 Dec 2018 10:39 PM GMT)

பல்லடம் அருகே நீலியம்மன் கோவிலில் இருந்த ஐம்பொன் சாமி சிலையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து பணத்தையும் அள்ளிச்சென்றனர்.

காமநாயக்கன்பாளையம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சியில் அப்பநாயக்கன்பட்டி செல்லும் வழியில் யாதவர் குலம், தென்னிலை குலத்திற்கு சொந்தமான நீலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நீலியம்மன், பாலமுருகன், பாலவிநாயகர், பொன்சடையச்சி, கன்னிமார் சாமிகள் உள்ளன.

இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த 15.9.2015 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி சாமி ஊர்வலத்துக்காக 55 கிலோ எடையில் நீலியம்மன் ஐம்பொன் சிலை செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களிலும் பூசாரி தினமும் பூஜைகள் செய்வது வழக்கம்.

இதேபோல் கடந்த 29-ந்தேதி பூசாரி ராதாகிருஷ்ணன் (வயது 65) கோவிலை திறந்து பூஜைசெய்து விட்டு பூட்டிச்சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கோவிலை திறக்க வந்தபோது முன்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது நீலியம்மன் ஐம்பொன் உற்சவர் சிலையை காணவில்லை. மேலும் கோவில் வளாகத்திற்குள் இருந்த உண்டியலையும் காணவில்லை.

மர்ம ஆசாமிகள் யாரோ கோவில் பூட்டை உடைத்து சாமி ஐம்பொன் சிலையையும், உண்டியலையும் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. உண்டியல் கோவில் வளாகத்திற்கு வெளியே திறந்து கிடந்தது. பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி, கோவில் கமிட்டி தலைவர் ரெங்கநாதனுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தார். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலை மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

இதே கோவிலில் கடந்த 29.9.2018 அன்று மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து 5 அடி நீளமுள்ள எவர்சில்வர் வேல், யூ.பி.எஸ். பேட்டரி மற்றும் ½ பவுன் தங்ககாசு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அது குறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது 2-வது முறையாக இந்த கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story