பீதர் அருகே நடுரோட்டில் விறகு கட்டையால் தாக்கி 2 பெண்கள் படுகொலை வாலிபர் கைது-பரபரப்பு தகவல்கள்


பீதர் அருகே நடுரோட்டில் விறகு கட்டையால் தாக்கி 2 பெண்கள் படுகொலை வாலிபர் கைது-பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 2 Dec 2018 10:45 PM GMT (Updated: 2 Dec 2018 9:16 PM GMT)

பீதர் அருகே நடுரோட்டில் விறகு கட்டையால் தாக்கி 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பீதர்,

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பீதர் மாவட்டம் மார்க்கெட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லேபர் காலனியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி துர்க்கம்மா (வயது 50). இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவர் லலிதம்மா (45). இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் துர்க்கம்மாவும், லலிதம்மாவும் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். லேபர் காலனி பகுதியில் இருக்கும் ஆஞ்சநேய சாமி கோவில் முன்பாக உள்ள ரோட்டில் 2 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வாலிபர், ஆஞ்சநேய சாமி கோவில் மீது கற்களையும், செருப்புகளையும் தூக்கி வீசிக் கொண்டிருந்தார். இதை பார்த்து துர்க்கம்மாவும், லலிதம்மாவும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோவில் மீது கற்களை வீசுவது ஏன்? என்று அவர்கள் வாலிபரிடம் கேட்டனர். இதுதொடர்பாக துர்க்கம்மா, லலிதம்மா ஆகியோருடன் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த வாலிபர் கோவில் முன்பு கிடந்த விறகு கட்டையை எடுத்து துர்க்கம்மா, லலிதம்மாவை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த 2 பேரும் சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த வாலிபரை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் பொதுமக்களையும் விறகு கட்டையால் தாக்க முயன்றதுடன், அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதற்கிடையில், உயிருக்கு போராடிய துர்க்கம்மா, லலிதம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். இதுபற்றி அறிந்ததும் மார்க்கெட் போலீசார் விரைந்து வந்து துர்க்கம்மா, லலிதம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பீதர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆஞ்சநேய சாமி கோவில் மீது வாலிபர் கற்களையும், செருப்புகளையும் வீசியதை தட்டிக்கேட்டதுடன், கற்களை வீசக்கூடாது என கூறியதால் துர்க்கம்மா, லலிதம்மாவை வாலிபர் விறகு கட்டையால் தாக்கி நடுரோட்டில் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக துர்க்கம்மா, லலிதம்மாவின் உடல்களை பார்த்து, அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதார்கள்.

இதற்கிடையில், தப்பி ஓடிய வாலிபரை மார்க்கெட் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் யாதகிரி மாவட்டம் சகாப்பூர் தாலுகா வடகெரா கிராமத்தை சேர்ந்த தேவேந்திரப்பா(34) என்று தெரிந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் பீதரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story