கள்ளக்காதல் விவகாரத்தில்: மனைவியால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட தொழிலாளி சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


கள்ளக்காதல் விவகாரத்தில்: மனைவியால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட தொழிலாளி சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2018 10:00 PM GMT (Updated: 3 Dec 2018 4:48 PM GMT)

கண்டமங்கலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கண்டமங்கலம், 

கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சபீனா பானு (35). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜாகீர் உசேன் வெளிநாட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் சபீனாபானுவுக்கும், பக்கத்துவீட்டை சேர்ந்த யுவராஜ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் இடையே கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி ஜாகீர் உசேனுக்கு தெரியவந்தது. எனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பிறகும் சபீனா பானு, யுவராஜுடன் தொடர்பு வைத்திருந்தார்.

இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சபீனா பானு, ஜாகீர் உசேன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தநிலையில் ஜாகீர் உசேன் வீட்டுக்குள் அலறித் துடித்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்து அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாகீர் உசேன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சபீனா பானு, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் ஆகியோர் ஏற்கனவே கண்டமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story