1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்


1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:45 PM GMT (Updated: 3 Dec 2018 9:18 PM GMT)

திருச்சியில் நடந்த விழாவில் 1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினர்.

திருச்சி,

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நேற்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் 1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

இதில் 63 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 50 பேருக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட 217 பேருக்கு நவீன காதொலி கருவிகள், கால்கள் துண்டிக்கப்பட்ட 10 பேருக்கு செயற்கை கால்கள், 2 கால்களும் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், பார்வையற்ற 8 பேருக்கு பிரெய்லி கைக்கெடிகாரம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்ய வங்கி கடன் உதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சம்சாத் பேகம், மாவட்ட விளையாட்டு அதிகாரி புண்ணியமூர்த்தி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக விழா நடைபெற்ற இடத்தில் மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

இதேபோல் நேற்று மாலை திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 2,006 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story