பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு: பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு: பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 4 Dec 2018 10:30 PM GMT (Updated: 4 Dec 2018 5:32 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

பாபர் மசூதி இடிப்பு தினமான நாளை (டிசம்பர் 6-ந் தேதி) அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் அனைத்து இடங்களிலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் பஸ் நிலையங்களில் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடனும், மோப்ப நாய் தமிழ் உதவியுடனும் சோதனை செய்தனர். அதேபோல் ரெயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடந்தது. ரெயில் நிலைய நுழைவுவாயில்களில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விழுப்புரம் ரெயில் நிலையத்திற்குள் வந்து சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் போலீசார், ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்தனர். அதேபோல் ரெயில் நிலைய தண்டவாள பகுதி முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து ஈடுபட்டனர். இவர்களுடன் விழுப்புரம் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான கடைவீதிகள், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் மற்றும் தேச தலைவர்களின் சிலைகள் இருக்கும் பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீசார் சென்று சந்தேக நபர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? என சோதனை செய்து வருகின்றனர்.

Next Story