தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் ஆய்வு


தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Dec 2018 11:00 PM GMT (Updated: 4 Dec 2018 7:45 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த வாழை, தென்னை மரங்களை வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் பாதிப்பை எவ்வாறு சரி செய்வது என ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,  

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலினால் தஞ்சை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள், தென்னை, வாழை மரங்கள் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்தன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை 7 பேர் கொண்ட மத்திய குழுவினரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தென்னை, வாழை, பலா மரங்கள் உள்ளிட்டவைகளை வேளாண் தொழில்நுட்பக்குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்கக இணை செயலாளர் தினேஷ்குமார், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் பாலசுதாஹரி, தோட்டக்கலை ஆணையர் மூர்த்தி மற்றும் தமிழக வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை வந்தனர்.

இவர்கள் தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டிக்கு சென்றனர். அங்கு விவசாயி துரைராஜூ வயலில் பயிரிட்டிருந்த வாழை முற்றிலும் சேதம் அடைந்ததை பார்வையிட்டனர்.

பின்னர் அங்கு புயலால் சேதம் அடைந்து காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பலா, வாழைத்தார் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். பின்னர் பாதிப்புகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த குழுவினர் ஒரத்தநாட்டை அடுத்த புலவன்காடு பகுதிக்கு சென்றனர். அங்கு விவசாயி நாகராஜ் சாகுபடி செய்திருந்த தென்னை மரங்கள் முற்றிலும் சாய்ந்து விழுந்து கிடந்ததை பார்வையிட்டனர். பின்னர் சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அடைந்திருந்த தென்னை மரங்கள் குறித்தும் காட்சிக்காக வைத்திருந்த புகைப்படங்களையும் பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து ஆவிடநல்லவிஜயபுரம் பகுதிக்கு சென்ற குழுவினர் அங்கு விவசாயி அய்யப்பன் என்பவரின் 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்து கிடந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது விவசாயிகள் இந்த பகுதியில் 191 ஏக்கரில் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன என்றும், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதற்கு வேளாண் தொழில்நுட்ப குழுவினர், நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக வந்துள்ளோம். இருப்பினும் இது குறித்து மத்திய அரசிடம் தெரிவிப்போம் என்றனர்.

இந்த குழுவுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனர் மதியழகன், தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நெடுஞ்செழியன் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதித்த பரப்பளவு மற்றும் கணக்கெடுக்கப்பட்டுள்ள விவரம் குறித்து குழுவினருக்கு தெரிவித்தனர்.

இரண்டு நாள் பயணமாக வந்துள்ள இந்த குழுவினர் திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள வாழை, தென்னை, மாமரம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

Next Story