அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் புறக்கணிப்பு


அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 11:00 PM GMT (Updated: 4 Dec 2018 8:30 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் புறக்கணித்தனர். இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 600 பேர் பங்கேற்றனர்.

திருச்சி,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தற்போது வழங்கப்படுகிற ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் நேற்று காலை புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நேற்று காலை புறநோயாளிகள் சிகிச்சை பணியை புறக்கணித்தனர். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில இடங்களில் பயிற்சி டாக்டர்கள் மூலம் அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்திருந்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று காலை 8 மணிக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். டாக்டர்கள் பணிக்கு வராததால் பயிற்சி டாக்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

நீண்ட நேரம் காத்திருந்து புறநோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் முழுமையான சிகிச்சை அவர்களால் பெற முடியவில்லை. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணிக்கு வராததால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.

போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் 600 பேர் புறநோயாளிகள் சிகிச்சை பணியை புறக் கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர். உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக வருகிற 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும். தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெறும்” என்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் வருகிற 10-ந்தேதி தொடர் முழக்க ஆர்ப்பாட்டமும், வருகிற 12-ந்தேதி புறநோயாளிகள் சிகிச்சைகளை முழுமையாக நிறுத்தியும் போராட்டம் நடத்த உள்ளனர். வருகிற 13-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தமும் நடைபெற உள்ளது.

அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு முசிறி கிளைசங்கம் சார்பில், நேற்று முசிறி அரசுஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் 7 பேர் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை மருத்துவர் மட்டும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இதனால் முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து புறநோயாளிகளாக வந்த பலரும் நீண்டநேரம் காத்திருந்து சிகிச்சை பெற்றனர். 

Next Story